வியாழன், 6 மார்ச், 2014

நான் எழுதிய பெண்கள்.
                                      - இமையம்

‘வெள்ளிக்கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே
    உன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்
                       பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்
                       அன்னிக்கி இந்தக் கருவக் கலச்சியிருந்தா
                       எனக்கு இன்னிக்கி இந்தக் கலகம் வந்து நேராது
                       அந்தக் கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையில
                       என்னெக் களங்கப்பட வச்சியம்மா.....‘

இந்தப் பாடல் செடல் நாவலில் வருகிறது. இப்பாடலை செடல்தான் பாடினாள். அதனால் அவளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. என்னுடைய மூன்று நாவல்களில் வரும் பெண்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும். அப்பெண்களுக்கும் இது பொருந்துவதாகவும் கொள்ளமுடியும். அதேபோன்று இப்பாடல் நான் எழுதிய  சிறுகதைகளில் வரும் பெண்களுக்கும் பொருந்தும். அவர்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும்.
       கோவேறு கழுதைகள் (1994) ஆறுமுகம் (1999) செடல் (2006) ஆகிய மூன்று நாவல்களும், மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008) கொலைச்சேவல் (2013) ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளையும் ‘பெத்தவன்‘ என்கிற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறேன். மூன்று தொகுப்பிலும் சேர்த்து 43 கதைகள். மூன்று நாவல்களும் மூன்று பெண்களின் வாழ்வையே பேசுகிறது. 43 சிறுகதைகளில் 36 கதைகளில் பெண்கள் – அவர்களுடைய வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இது ஆச்சரியமான நிகழ்வு. எனக்கே நம்புவதற்கு வியப்பாக இருக்கிறது. என் நாவல்களில், என் சிறுகதைகளில் பெண்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.
       நான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான்  பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப்பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள்கூட வருவதில்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.
                என்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்புக்கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள்? அதுவும் பெண்கள்? தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்?   
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொது சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலிகொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.
       பெண்களைப்பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ் – இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும். பிறகு எப்படி பெண்களைப்பற்றி எழுதுகிறேன்? கல்யாணத்திற்கோ, பிற விசேசங்களுக்கோ என்னை அழைத்தபோது – கல்யாணத்திற்கு முன் ‘நீ வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் நடந்த பிறகு ‘குடும்பத்தோடு வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் ஆகாதவரை நான் ‘காலி பயல்‘. கல்யாணமானதும் நான் குடும்பஸ்தன். குடும்பம், குடும்பஸ்தன் என்ற சொல் – பெண்ணோடு ஆண் சேர்ந்த பிறகுதான் வருகிறது. பெண் வெறும் பெண்ணல்ல. குடும்பம். அதனால் நான் பெண்களை அல்ல குடும்பங்களை எழுதியிருக்கிறேன். பெண்கள்தான் படைப்புக்கான ஊற்றுக்கண். நிலம்.  
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும், தெருவும் கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள். பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப் போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசை தீர வாழ துடிப்பவர்கள். என்னுடைய பெண்களில் ஒருத்திக்கூட தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்ல. அந்த எண்ணம் என்னுடைய எந்த பெண்ணின் மனதிலும் வந்ததே இல்லை.  ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தைத் தவிர. மாதா மாதம் உதிரத்தைப் பார்க்கிறவர்கள் பெண்கள். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் உதிரத்தைப் பார்க்கிறவர்கள். ஆனால் தன் குழந்தையின் கையில் ஒரு துளி ரத்தத்தை கண்டதும் துடித்துப்போகிறவர்களும் பெண்கள்தான். இந்த துடிப்பு – வசீகரம் – அழகுதான் பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. அதே மாதிரி பெண் தன்னைவிட்டு அந்நியப்பட்டு விடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் – சமூக – ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனிமனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னை பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண்.  பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது? துணிச்சல் இது. இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட ஆணிடம் இல்லை.
நம்முடைய புராண, இதிகாச, ஐதீக கதைகள், நீதிக்கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய் மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப்பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்ச பூதங்களும் கைகட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்.
                தாய்வழிச் சமூக அமைப்பிலேயே பெண்ணுக்கு தீயை, மழையை, காற்றை தன் ஏவலுக்கு உட்படுத்தும் ஆற்றல் இருந்தது என்று நம்பப்பட்டது. காப்பிய காலத்திலும் அதே நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கற்பு உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று வரையறுத்தது.
‘மாநகர் உள்ளீர் மழை தரும் இவள்‘ என்று மணிமேகலை சொல்கிறது.
‘வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு‘ என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை‘ என்று வள்ளுவர் சொல்கிறார். என்னுடைய பெண்கள் மழையை வரவழைக்கிறவர்களோ – மழையை நிறுத்துகிறவர்களோ, மழை வராமல் இருப்பதற்கான காரணத்தைத் செய்கிறவர்களோ அல்ல. ‘இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டு போச்சி‘ என்ற வகையறாக்கள். ஒரு வகையில் சாமி குத்தம் செய்யாதவர்கள்.
       நான் உருவாக்கிய பெண்களில் ஒருத்தி கோவேறு கழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியம். வண்ணாத்தி. அவள் மூலமாகத்தான் ஊர் துணிகள் வெளுக்கப்படுகின்றது. அவளுடைய உதவியால்தான் ஊரில் குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த குழந்தைகளின் பீ துணி, மூத்திரத் துணி அலசப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்ணின் தீட்டுத்துணியை அவள்தான் அலசித்தர வேண்டும். பிள்ளை பெற்ற பெண்களுக்கு மார்கட்டிக்கொண்டால் அவள்தான் வைத்தியம் செய்ய வேண்டும். பிள்ளைக்கு பால் கொடுக்க தாய்க்கு சுரக்கவில்லை என்றால் வண்ணாத்தியின் மார்பகத்தில்தான் பிள்ளை பால் குடிக்க வேண்டும். பெண் பிள்ளை வயசுக்கு வந்தால் சடங்கு முடியும்வரை நாள்தோறும் தீட்டுத்துணியை எடுத்துக்கொண்டு போய் அலச வேண்டும். ஊரில் யார் செத்தாலும் முதலில் அவள்தான் போக வேண்டும். எழவு சொல்ல, வாய்க்கரிசி தூக்க, பாடை கட்ட, குடம் உடைக்க, பால் தெளிக்க என்று அவள்தான் போக வேண்டும். அறுவடை காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் களம் தூற்ற போக வேண்டும். இரவில் ஒவ்வொரு வீட்டுக்கும் சோறு எடுக்க போக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திருட்டுப் பிள்ளை வாங்கும் பெண்களின் கருவை கலைக்கவும் ஆரோக்கியம் வேண்டும். ஊர் ஆண்கள் செய்யும் பாலியல் தொல்லைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன் மகள் மேரி எதிர்கொள்ளும் வன்புணர்ச்சியையும் அவள் சகித்துக்கொள்கிறாள்.
       ஆரோக்கியத்தை யார் உருவாக்கினார்கள்? சமூகம். ஊரின் நலனுக்காக – பொது சொத்தாக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட, பலிகொடுக்கப்பட்ட பெண். அவளைத் தெரியாமல் அந்த ஊரில் யாராவது இருக்க முடியுமா? ஆண்களே இல்லையா, ஆண்கள் வேலையே செய்யவில்லையா என்று கேட்கலாம். நாவலில் ஆண்கள் இருக்கிறார்கள். தாய் ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டியாடுகள் மாதிரி. ஆரோக்கியத்தின் பின்னால் சவுரி. மேரியின் பின்னால் அவளுடைய புருசன். மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கையைக்கட்டிக்கொண்டு சின்ன சேலத்திற்கு ஓடுகிறான் ஜோசப்.
       கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் மட்டும்தான் சமூகம் பலி கொடுத்த பெண் என்று சொல்ல முடியாது. ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – எல்லாருமே தனது உல்லாசத்திற்காக சமூகம் – பலி கொடுத்த சமூகத்தின் பொது சொத்தாக்கிய பெண்கள். பாலியல் தொழிலாளிகள். இந்த நாவலில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆள் பிடித்துவரும் தரகர்கள், பெண்களை வைத்து தொழில் செய்யும் எஜெண்ட்டுகள், போலீஸ்ஸ்டேஷன், கோர்ட் என்று அலையும் ஆண்கள் இருக்கிறார்கள். எல்லாருமே தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா என்ற பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் நிழல்கள். ஆண்கள் காற்றிலாடும் மரங்களாக இருக்கிறார்கள். பெண்கள் சூரைக்காற்று. என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். எப்படி இருக்கிறார்கள்? பெண்களுடைய ஏவல் ஆட்களாக, எடுபிடிகளாக. என்னுடைய பெண்கள் உழைக்கிறவர்கள், உழைப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அதனால் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உழைப்பு அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கிறது.
       நகரமயமாதல் – பெண்களை ஒரு வகையில் சுதந்திரமானவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் பெண்களை இரட்டை உழைப்புக்கு ஆளாக்குகிறது. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் பெண்களுக்கு குறைந்த சம்பளம் தரப்படுகிறது. பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பதற்காகத்தான். அதிக உழைப்பு. குறைந்த சம்பளம். பெண்கள் என்றால் போராட்டமும் வராது. பாலியல் சீண்டலும் செய்யலாம். ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய பெண்களில் ஒருத்திகூட பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வக்கிரத்திற்க்கு ஆளாகாதவள் என்று யாரையும் அடையாளம் காட்ட முடியாது. இது நகரமயமாதல் பெண்களுக்கு தந்த வெகுமதி. இதைத்தான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் போற்றுகிறோம். அதிவேக வளர்ச்சி அதிவேக சீரழிவு.
       பாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யாரு? ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? இது யாருடைய விருப்ப தேர்வு?
       சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாக்க்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஆண்களுக்கு  பெருந்துவதில்லை. யோனியை வெல்லும் திறன் உலகில் எந்த ஆணிடமும் இல்லை. பெண்ணின் உடலை வெல்ல முடியாது என்கிற உண்மையை மறைப்பதற்காக ஆணின் இயலாமையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுக்க நெறிதான் – கற்பு. காலத்திற்கு காலம் சமூகம் மாறுகிறது. வாழ்வியல் முறைகள் மாறுகின்றன. ஆனால் பெண்ணுக்கென்று உருவாக்கப்பட்ட கற்பு நெறி – என்பது மட்டும் மாறவே இல்லை. நம்முடைய சமூகம் பெண்ணின் பெருமையை, முழுமையை அவளுடைய கன்னித்திரையில் வைத்திருக்கிறது. கன்னித்திரையை புதுப்பித்துக்கொள்வதின் வழியாக தங்களுடைய புனிதத்தன்மையை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதில் இன்றைய நவீன பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். கன்னித்திரையை மீட்டு தருவதற்கான மருத்துவ மனைகளும் பெருகிவிட்டன.
       ஆண்கள் என்ற புனிதர்கள், உத்தமர்கள், இறை தூதர்கள் கன்னி திரையின் ஒழுக்கத்தையே பெண்ணின் ஒழுக்கமாக, கற்பு நெறியாக உருவாக்கிய புனிதத்திற்கு எதிரானவர்கள் என்னுடைய பெண்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கற்பு நெறி என்று ஒன்றும் இல்லை. புனிதம் என்று ஒன்றும் இல்லை. கன்னித்திரையை புதுப்பித்துக்கொண்டு தங்களுடைய பெண்மையின் புனிதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. சமூக எதார்த்தத்தின் முகம் கொடூரமானது. ‘குரூரமானது என்பதை என்னுடைய பெண்கள் காட்டுகிறார்கள். அதோடு சமூகத்தின் பித்துக்குளித்தனத்தையும்.

       கோவேறு கழுதைகள் நாவலின் ஆரோக்கியம். ஒரு கிராமத்தின் சொத்தாக, ஒரு கிராமத்திற்காக மட்டுமே பலியிடப்பட்டவளாக இருக்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – ஒரு நகரத்தின் சொத்தாக, பலியிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
       செடல் நாவலில் வரும் செடல், பாஞ்சாலி, லட்சுமி ஆகியோர் கிராமம், நகரம் என்ற எல்லையை மீறி பல ஜில்லாவிற்கும் பொதுவாக, பல ஜில்லாவுக்குமாக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். செடலுக்கு முப்பது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. அதே மாதிரி பாஞ்சாலிக்கும் இருபது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. இருவருமே கிராம தெய்வத்திற்கு பொட்டுக்கட்டிவிடப்பட்டவர்கள். பொட்டுக்கட்டிவிடப்பட்ட கோவில்களில் ஆடுவதோடு ஜில்லாவிட்டு ஜில்லா சென்று தெருக் கூத்து ஆடுகிற ஆட்டத்தினால் பல ஜில்லாவிலும் புகழ்பெற்ற பெண்களாக இருக்கிறார்கள். இன்று குறவன் குறத்தி ஆட்டத்தில் ஆடுகிற பெண்கள் குறித்து பொது சமூகத்தின் மனநிலை என்ன? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராக தெருக்கூத்து ஆடச் சென்றவர்கள் பாஞ்சாலியும் செடலும். சமூகம் அவர்களை எப்படி பார்த்திருக்கும்? எப்படி நடத்தியிருக்கும்? எப்படி அதை இப்பெண்கள் சகித்துக் கொண்டார்கள். சங்க இலக்கியம் வர்ணித்த ‘ஆடற் மகளிர்‘ இனத்தின் கடைசி வாரிசுகள்தான் பாஞ்சாலியும், செடலும்.
       ஒரு கிராமத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண் ஆரோக்கியம். நகரத்தின் தேவைக்காக பலியிடப்பட்டவர்கள் தனபாக்கியம், வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா. சமூகத்தின் சாதிய, சமய நம்பிக்கைகளுக்காக, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளுக்காக பலியிடப்பட்ட செடலும் பாஞ்சாலியும். வண்ணாத்தி  இல்லாமல் இருக்க முடியுமா? காம செயல்பாடுகள்தானே ஆணின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு. அது இல்லாமல் எப்படி? சமூகம் என்றால் சாதி வேண்டும், சமயம் வேண்டும், நம்பிக்கைகள், அறம், நீதி வேண்டும். சமூகத்தின் இந்த மூன்று தேவைகளுக்காகவும் உருவாக்கப்பட்டவர்கள்தான். செடல், பாஞ்சாலி நான் உங்களுக்கு காட்டிய ஆரோக்கியம், தனபாக்கியம், சின்னப்பொண்ணு, அபிதா, வசந்தா. மாற்றிக்கூறினால் பொது உழைப்பிற்கு ஆரோக்கியம், பொது உல்லாசத்திற்கு தனபாக்கியம், பொது நம்பிக்கைக்கு செடல். இப்பெண்களின் வாழ்க்கையை தீர்மானித்தது – சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம்கூட அல்ல. சமூகம்.
       என்னுடைய நாவல்களில் வரக்கூடிய பெண்கள்தான் பொது சொத்தாக, ஊர் அறிந்தவர்களாக, சமூகத்திற்காக சமூகத்தால் பலியிடப்பட்டவர்கள் என்றால் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளில் வரக்கூடிய பெண்களின் வாழ்க்கையையும் சமூகமே தீர்மானிக்கிறது.
       திருட்டுப்போன பெண்ணு – சாமக் கோடாங்கி இனத்தை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்த இனத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால் உடனே ஊர் மந்தையில் குச்சில் கட்டி தங்கவைத்து, இருபது நாட்கள் கழித்து சடங்கு முடித்துத்தான் பெண்ணை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். குச்சிலில் பெண் தங்கியிருக்கும்போது – பெண்ணுக்குரிய தாய்மாமன்கள், முறை மாமன்கள் – அவர்களுக்கிடையே பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று போட்டியிருந்தால் பெண்ணைத் தூக்கிக்கொண்டுபோய் தாலி கட்டி விடுவார்கள். அவ்வாறு தாலி கட்டிவிட்டால் பெண்ணை பெற்றவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது. சேர வேண்டியவனுக்கு சேர்ந்துவிட்டது சொத்து – என்று சாதி பஞ்சாயத்தில் தீர்ப்பாகிவிடும். அந்தமாதிரி எதுவும் நடக்கக் கூடாது என்று காவல் இருப்பார்கள். காவலை மீறி பெண்கள் திருட்டுப் போவது வழக்கம். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள். அதில் ஒரு பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று கடும்போட்டி. அதனால் இரவோடு இரவாக ஒரு  பெண்ணைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். விடிந்து பார்த்தபோதுதான் தெரிந்தது – தூக்கிக்கொண்டுவரவேண்டிய பெண் ஒன்று, தூக்கிக்கொண்டு வந்த பெண் ஒன்று. பெண் மாறிவிட்டது. ஊர்ப்பஞ்சாயத்துக்கு, சாதி பஞ்சாயத்துக்கு பயந்துக்கொண்டு எட்டு நாள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்துவிட்டு பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். திரும்பி வந்த பெண்ணுக்கு – அதாவது திருட்டுப்போன பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கவில்லை. காரணம் திருட்டுப்போன பொண்ணு என்பதால் கல்யாணம் நடக்காமலேயே கிழவியாகிவிடுகிறாள். கல்யாணம் நடக்காமல் வீட்டிலேயே இருந்துவிட்டதால் தெருவிலிருக்கும் குமரி பிள்ளைகளுக்கு அவள்தான் துணை. விளையாட்டுத் தோழி. பிள்ளைக்காரிகளுக்கு பிள்ளை வைத்திருக்கிற ஆள். கிழவிகளுக்கு கதை கேட்கிற ஆள் – என்று கிழவியாகிவிடுகிறாள். திருட்டுப்போன காரணத்தினால் அந்த ஊருக்கு மட்டுமல்ல. சுற்றுவட்டார ஊர்களுக்கும் தெரிந்த பெண்ணாக – பெயர் பெற்ற பெண்ணாக இருக்கிறார்கள். அவளுடைய வாழ்க்கையை யார் தீர்மானித்தது? திருட்டுப்போனதால் அவளைக் கல்யாணம் கட்டிக்கொள்ளத்தான் யாரும் வரவில்லை. ஆனால் திருட்டுக்காதல் செய்யவும், திருட்டுப்பிள்ளை கொடுக்கவும் ஊர் உலகத்து ஆண்கள் எல்லாம் வந்தார்கள் என்பது முக்கியமானது.
       அணையும் நெருப்பு கதையில் வரும் பெண்ணின் பெயர் சந்தோசம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஒரு பையனைக் காதலித்ததால் அவளுடைய காதலை பள்ளிக்கூட சுவர், வாட்டர் டேங்க் என்று பையன்கள் எழுதி விடுவதால் – சந்தோசத்தின் காதல் விசயம் பத்து இருபது ஊர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சந்தோசத்திற்கு அவசரமாக கல்யாணம் நடக்கிறது. மாப்பிள்ளை போலீஸ்காரர். இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கிறது. பன்னிரெண்டாவது வருசத்தில் ஒரு விபத்தில் சந்தோசத்தின் புருசன் இறக்க கருணை அடிப்படையில் வேலை கேட்டு – புருசன் வேலை செய்த காவல் நிலையத்திற்கு போகிறாள். அங்கிருக்கும் ஆய்வாளர் உதவுகிறார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுத, ஒவ்வொரு அலுவலகமாக,  ஒவ்வொரு ஊராக செல்ல உதவுகிறார். இரண்டாண்டு கடக்கிறது. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்கும் காதல் ஏற்படுகிறது. வேலை கிடைக்கிற நேரத்தில் ஆய்வாளரின் மனைவி சந்தோசத்தின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். ஆய்வாளரை கைது செய்யக்கோரி. பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்கிறார்கள். சாலை மறியல் என்பதால் செய்தித்தாள், தொலைக்காட்சிகள் வருகின்றன. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்குமான காதல் – உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஊடகத்தால் சந்தோசம் விபச்சாரியாக்கப்படுகிறாள். ஆய்வாளரின் மனைவி பத்தினியாக்கப்படுகிறாள்.
       சந்தோசத்தின் காதல் ஏன் பள்ளியின் சுவர்களில் எழுதப்படுகிறது? முப்பது வயதில் ஏற்பட்ட காதல் ஏன் உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது? உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண். வரம் என்ற கதையில் வரும் பெரியநாயகம். தான் பெற்ற ஒரே பிள்ளையும் சாக வேண்டும் என்று குலத்தெய்வத்திடம் வேண்டுகிறாள். பெரியநாயகத்தின் மகள் +2வில் கடைசி பரீட்சை எழுதபோனவள் சொந்த பெரியப்பா மகனோடு ஓடிப்போய்விடுகிறாள். விசயம் ஊர் உலகத்திற்கே தெரிந்துவிடுகிறது. அப்போது குல தெய்வத்திடம் வேண்டுகிறாள். ‘இன்னம் எட்டாம் நாளுக்குள்ளார அவ சாவணும். இல்லன்னா ஒம் மூஞ்சியில சாணிய கரச்சி ஊத்திப்புடுவன்‘ என்று சாமிக்கு உத்தரவு போடுகிறாள்.
       சாமியின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுகிற பெண் – பெரியநாயகம்.
       பொன்னம்மாவின் குடும்பக் கதையில் வரும் பொன்னம்மா. ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போகிறது. அப்படிப்போகும்போது குல தெய்வத்தை ஒரு கூடையில் வைத்து தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஒரு ஊரில் நிலை பெறுகிறார்கள். குலசாமியை குடி வைக்கிறார்கள். குடும்பம் பெருகுகிறது. குடிசாமியின் புகழ் பரவுகிறது. படிப்படியாக குடும்பம் பல குடும்பமாகி, பல ஊர், பல தேசம் என்று சிதறுகிறது. ஒரே ஒரு பெண் மட்டும் எஞ்சுகிறாள். அவள்தான் பொன்னம்மா. அனாதையாகிவிட்டதால் இரவும் பகலும் கோவிலைக் கூட்டிக்கொண்டு கிடக்கிறாள். இரவில் சாமி வந்து பொன்னம்மாவோடு படுத்துக்கொள்கிறது. அவள் புருசனோடு படுத்திருந்தாலும், புருசனை விலக்கி விட்டுவிட்டு குள்ளக்கருப்பு சாமி அவளோடு படுத்துக்கொள்ளும்.
சாமியோடு படுத்துக்கொள்கிற பெண் – பொன்னம்மா.
       பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள்? பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா? வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா? தெரியாது.
 சத்தியக்கட்டு கதையில் வரும் பொன்னருவி தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண். உயர்ச்சாதிக்காரனால் காதலிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள். எட்டு மாதம். கல்யாணம் செய்துகொள்ள கேட்கிறாள். உயர்ச்சாதிக்காரனின் வாரிசு தாழ்த்தப்பட்ட இனத்தின் பெண்ணின் வயிற்றில் வளருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் உயர்ச்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவில் வாழ முடியுமா? முடியாது. அப்படியிருக்கும்போது அவள் எப்படி உயர்ச்சாதிக்காரனோடு இணைந்து வாழ்வது? அதனால் ஒரு குளத்தில் மூழ்கடித்து கொல்லப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதிக்காரி செத்ததால் அந்த குளம் தீட்டுக்குளம் என்றாகி, ஆடுமாடுகள்கூட அந்தக் குளத்தில் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுகின்றன. போலீஸ், கோர்ட், வழக்குக்குப் பயந்துகொண்டு ‘பொன்னருவி – சாமியாக்கப்படுகிறாள். பொன்னருவி சாமி. கல்யாணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கொடுக்கும் சாமி. பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளை வரம் கொடுக்கும் சாமி. பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்க வரம் கொடுக்கும் சாமி. ஒவ்வொரு வருசமும் பொன்னருவி சாமிக்கு திருவிழா நடக்கிறது. அவள் கொலை செய்யப்பட்ட குளம் மட்டும் இன்றும் தீட்டுக்குளம். பொட்டைக்குளம். பறச்சிக்குளம்.
       தமிழகத்தில் பெண் தெய்வங்களாக உள்ள எல்லா சாமிகளுமே ஒரு காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களே. உயர்ச்சாதிக்காரனை காதலித்த தாழ்த்தப்பட்ட பெண்கள் – தாழ்த்தப்பட்ட இனத்து ஆண்களை காதலித்த உயர்குலத்துப் பெண்கள் கொல்லப்பட்டனர். சாமிகளாக்கப்பட்டனர். சாதியின் பெருமைக்காக, சாதியின் பெருமையை காக்க கொலை செய்யப்பட்ட பெண்கள்தான் மாரியம்மன், தீப்பாஞ்சம்மன், செங்கேணியம்மன்.  சீலைக்காரி அம்மன். மானங்காத்தாள் – என்று ஒரு சாமி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்து ஆணை காதலித்த உயர்குலத்து பெண் கல்யாணி. அவளுடைய காதலை வீடும், ஊரும், சாதியும் எதிர்க்கிறது. ஊர் கொல்வதற்கு முன் நீயாகவே செத்துவிடு என்று சொல்கிறார்கள். அதை ஏற்று தானாகவே செங்கல் சூளைக்குள் இறங்கி மாண்ட பெண் கல்யாணி. சாதி பெருமையை காப்பதற்காக செங்கல் சூளையில் உயிர்விட்டாள். சாதியின் மானத்தைக் காப்பாற்றினாள். அதனால் அந்த பெண்ணுக்கு – அதாவது சாமிக்கு மானங்காத்தாள் என்று பெயர். இந்திய தொன்மம் என்பது இவர்கள்தான். இப்படியான பெண்களில் கண்ணகி – கொற்றவை என்கிற தொன்மமும் அடங்கும்.
       ஆரோக்கியம், மேரி, தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா, செடல், பாஞ்சாலி, திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா, பாக்கியம் – பொன்னருவி, கோகிலா இத்தனை பெண்களில் – ஒருத்திகூட தன்னுடைய வாழ்வை – விருப்பத்தை தானே முடிவு செய்தவர்கள் அல்ல. மாறாக ஊர் முடிவெடுக்கிறது – உலகம் முடிவெடுக்கிறது. திருட்டுப்போன பொண்ணை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? தெரியாது. பெத்தவன் கதையில் பாக்கியத்தின் காதலன் யார்? தெரியாது. இப்பெண்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்பெண்கள் என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.
       அணையும் நெருப்பு – சந்தோசம் விதவை. ஒரு கதையும் இரண்டு மனிதர்களும் கதையில் வரும் – குள்ளம்மாள், பழம்புளி வீட்டு கதையில் வரும் – பஞ்சவர்ணம், அவரவர் பாடு கதையில் வரும் தீபாவின் அம்மா – உயிர்நாடி கதையில் வரும் தங்கம்மா, அன்னக்கிளியும் பன்றிக்கறியும் கதையில் வரும் பழனியம்மா – விடியாத இரவு – பழனியம்மா – தொடரும் கதையில் வரும் – சின்னம்மா அம்மாவின் இடம் கதையில் வரும் அம்மா – நிஜமும் பொய்யும் கதையில் வரும் மொட்டையம்மாள், பயணம் கதையில் வரும் லோகாம்பாள், அம்மா கதையில் வரும் பெண், நாளை கதையில் வரும் பெண், கொலைச்சேவல் கதையில் வரும் கோகிலா இவர்கள் அனைவரும் விதவைகளே.  இப்படி எல்லாருமே விதவைகளாக இருக்கிறார்கள். கணவன் இல்லாததை ஒரு குறையாக, பெரிய இழப்பாக கருதாதவர்கள். முடங்கிப்போகாதவர்கள். சகிப்புத் தன்மையை தங்களுக்கான பொக்கீசமாக, ஆபரணமாக ஏற்றுக்கொண்டவர்கள்.
       சமூகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கும்போது – சமூகத்தால் இழிவு செய்யப்படுகிற பெண்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். ஆரோக்கியம் ஒரு பெண் அல்ல. ஒர கிராமத்தின் மொத்த வாழ்க்கை. செடல் நம் சமூகத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகள். தனபாக்கியம், திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா – இது எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. இவர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள்.
       நான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.
 ஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களுக்குள் சேமித்து வைக்க – இப்பெண்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக இருந்தார்கள். கண்ணாடியாக இருந்தார்கள்.
••••••••••

04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக